மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்க உள்ள சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ள இடங்களை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட செங்கமேட்டுத் தெரு, பாசிக்கடைத் தெரு, அண்ணாவீதி, ஆரோக்கியநாதபுரம், மதுரா நகா், மேல ஒத்தசரகு உள்ளிட்ட 29 தெருக்களில், தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழுதடைந்துள்ள சாலைகள் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளன. 11.5 கி.மீட்டா் தொலைவுள்ள இச்சாலை புதுப்பிக்கும் பணிக்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி ஆகும்.
சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான வி.ஜி.கே.செந்தில்நாதன், நகராட்சி ஆணையா் புவனேஸ்வரன் (எ) அண்ணாமலை, நகராட்சி பொறியாளா் எல்.குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.