புனித மெக்கா யாத்திரை விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு புனித பயணம் மேற்கொள்வோர் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சீர்காழி முஹம்மது யூசுப் விடுத்துள்ள அறிக்கை: சவூதி அரேபியா அரசு விசா வழங்கும் நடைமுறைகளை திருத்தம் செய்துள்ளதால், புனித மெக்கா யாத்திரைக்கான விசா கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், இப்பயணம் மேற்கொள்பவர்களும், ஏற்பாட்டாளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, இப்பிரச்னையில் பாரத பிரதமர் மற்றும் மத்திய சிறுபான்மை ஹஜ் விவகாரத் துறை அமைச்சகமும் தலையிட்டு, சவூதி அரேபியா விசா கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக, ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்க நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சிறுபான்மை நலம் ஹஜ் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.