தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இளைஞர் காங்கிரஸார் தயாராக வேண்டும் என அதன் தேசியச் செயலாளர்ஆப்ரகாம் ராய் மணி தெரிவித்தார்.
நாகை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் விழுதுகளை நோக்கி எனும் தலைப்பில் கூட்டம் வெள்ளிக்கிழமை நாகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆப்ரகாம் ராய் மணி பேசியது:
இளைஞர்கள்அரசியலில் அதிகளவில் பங்கேற்றவேண்டும் என்பதையே இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி விரும்புகிறார். அதை நோக்கியே அவரின்அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியைப் பலப்படுத்த இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவேண்டும். நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவியிடங்களுக்கும் போட்டியிட தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
இக்கூட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சி. கே. போஸ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் உதயசந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அசன் மெளலானா, கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ் ஆகியோர் பேசினர்.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், வேதை. ஜி. சங்கரவடிவேல் மற்றும் காங்கிரஸ் நிர்வாரிகள்,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.