நாகப்பட்டினம்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும்: த. ஜெயராமன் வலியுறுத்தல்

18th Jul 2019 12:28 AM

ADVERTISEMENT


ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக,  மயிலாடுதுறையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  தமிழக மக்களைப் பற்றி சிந்திக்காமல், மத்திய அரசு தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை அறிவிக்கிறது. இதுகுறித்த கேள்விக்கு சட்டப் பேரவையில், அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அவற்றை ஏற்க முடியாது என்கிறார். உடனடியாக நிராகரித்திருக்க வேண்டியதுதானே?. இதுபோன்ற திட்டங்களை ஏற்க முடியாது என்று மறுத்து, இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இன்னமும் அதை செய்யவில்லை. 
இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் செயல்படுத்தக் கூடாது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்படி, ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்காமல், இந்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கின்றது.  தமிழக அரசு இந்த பிரச்னையை முறையாக அணுக வேண்டும். அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுவது போல், கிரிமினல் வழக்குத் தொடர்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவில் மத்திய அரசும், நீதிமன்றங்களும் தலையிட முடியாது. மேலும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, கட்சி வேறுபாடின்றி, இந்தக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லையெனில், இந்த பிரச்னையில் தமிழகத்துக்குத் தோல்வியே 
ஏற்படும் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT