கொள்ளிடம் அருகே கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க, மாதிரவேளூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து அக்ரஹாரம் தெரு வழியாக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருந்தகம் வரை செல்லும் சாலையில் 1.5 கி. மீ. தூரத்துக்கு குழாய் பதிப்பதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, சைக்கிள்களில் செல்லும் பள்ளி மாணவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் அதில் விழுந்து, காயமடைகின்றனர். எனவே, இந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.