16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர், மாணவியர் மற்றும் மாணவர்கள் அல்லாதவர்களுக்கான கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாமில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2018-2019-ஆம் ஆண்டு உலகத் திறனாய்வு திட்டத்தின்கீழ் கல்வி மாவட்ட அளவில் 6, 7, 8- ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட தடகளப் போட்டிகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு 5 நாள் இருப்பிடமில்லா பயிற்சி முகாம் ஏப்ரல் 28 முதல் மே-2 ஆம் தேதி நடைபெறுகிறது.
மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம், மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் சிறப்பு சரக பயிற்சி மையத்திலும், நாகை கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளன. ஒரு கல்வி மாவட்டத்துக்கு 60 மாணவர்கள் என 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளி மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதேபோல், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதோருக்கான இருப்பிடமில்லாத விளையாட்டுப் பயிற்சி முகாம் மே.1 முதல் 25- ஆம் தேதி நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமில் தடகளம், கையுந்துப் பந்து, கால்பந்து, கூடைப்பந்து, யோகா, வாள்சண்டை மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. மே 1 முதல் 15- ஆம் தேதி வரை காட்டுச்சேரி, ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளில் அமைக்கப்பட்டுள்ள சிறு விளையாட்டரங்கங்களில் தடகளம், கையுந்துப் பந்து, கால்பந்து, கூடைப் பந்து மற்றும் ஹாக்கி விளையாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு காலை, மாலை வேளைகளிலும் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியில் திறமையானவர்கள் என கண்டறியப்படுபவர்கள், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உருவாக்கப்படுவார்கள். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்ப்பை நாகை மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.