நாகை மாவட்டம், புதுப்பள்ளி கிராமத்தில் குடிநீர்ப் பிரச்னையால் அவதிக்குள்ளாகி வந்த கிராம மக்கள் தங்களின் முயற்சியால் ரூ. 2 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயை அமைத்து குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர்.
கஜா புயலின்போது கடல் நீர் உள்புகுந்ததால் நாகை மாவட்டம், புதுப்பள்ளி கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளானது. இதனால், அந்த கிராமத்தில் குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டது. குடிநீருக்கு கிராம மக்கள் அலைய வேண்டிய நிலை உருவானது.
இதுதொடர்பாக, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், புதுப்பள்ளி கிராம மக்கள் தங்களது சொந்த முயற்சியால் ரூ. 2 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் குழாய் அமைத்து, குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர். இந்த குடிநீர் குழாய் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. கிராம மக்களின் இத்தகைய முயற்சிக்கு பலர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியது: கஜா புயலின்போது கடல்நீர் உள்புகுந்ததால் புதுப்பள்ளி கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததால், சுத்திகரிக்கபட்ட குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்தோம். கிராம மக்களிடம் நிதியை திரட்டிக் கொண்டோம். ஒன்றுபட்டோம், எங்களது தேவையை நாங்களே பூர்த்தி செய்து கொண்டோம் என்றார்.