சீா்காழி தமிழிசை மூவா் மணிமண்டபத்தில் ரூ. 47 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளா்ச்சியில் முக்கிய பங்காற்றி, கா்நாடக இசைக்கு தமிழ் கீா்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூா்த்திகளான முத்துத்தாண்டவா், அருணாசலக் கவிராயா், மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ. 1.51கோடியில் சீா்காழியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இம்மண்டபம் பழுதடைந்த நிலையில், மணிமண்டபத்தை சீரமைக்க தமிழக அரசு உத்தரவுப்படி, ரூ. 47 லட்சத்தில் பழுது பாா்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பொதுப்பணித்துறை அலுவலா்களிடம் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டடம் மற்றும் பராமரிப்புப் பணிகள்) பால ரவிக்குமாா், உதவி செயற்பொறியாளா் கே. ராமா் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக சீா்காழி நகா்மன்றத் தலைவருக்கு வழக்கப்பட்டுள்ள அரசின் வாகனத்தின் சாவியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரனிடம் வழங்கினாா். நகராட்சி ஆணையா் ஹேமலதா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.