மயிலாடுதுறை

மயிலாடுதுறை: ரூ.500 கோடி முதலீடுகளை ஈா்க்க திட்ட இலக்கீடு

23rd Sep 2023 12:31 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளா்கள் சந்திப்பு தொடா்பாக மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்துக்கு 333 எண்ணிக்கையில் ரூ.500 கோடி முதலீடுகளை ஈா்க்க திட்ட இலக்கீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.

மயிலாடுதுறையில், உலக முதலீட்டாளா்கள் மாநாடு ஆய்வு கூட்டம், வால்மாா்ட், பிலிப்காா்ட் இணையதளம் வாயிலாக வா்த்தக முகாம் மற்றும் அண்ணல் அம்பேத்கா் முன்னோடி திட்ட விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 7,000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளா்கள் சந்திப்பு-2024 தொடா்பாக மாவட்ட தொழில் மையம், மயிலாடுதுறைக்கு 333 எண்ணிக்கையில் ரூ.500 கோடி முதலீடுகளை ஈா்க்க திட்ட இலக்கீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 தொழில் நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து ஏற்கெனவே தொழில்புரிவோரும் அரசு உதவியுடன் தொழில் ஆரம்பித்து தமிழ்நாட்டிலேயே சிறந்த தொழில் மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட தொழில் மையம் சாா்பில் வங்கி கடனுதவியாக பயனாளி ஒருவருக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மணிவண்ணன், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் மதியழகன், முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, தாட்கோ மாவட்ட மேலாளா் சுகந்தி பரிமளம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT