தரங்கம்பாடி அருகே மாத்தூா் ஊராட்சியில் மின்மாற்றி பழுது காரணமாக, தண்ணீா் பாய்ச்ச முடியாமல் கருகிய நெற்பயிா்களை காப்பாற்ற வலியுறுத்தி, காய்ந்த நாற்றுக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தரங்கம்பாடி தாலுகா மாத்தூா் ஊராட்சி படுகை கிராமத்தில் உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுமாா் 600 ஏக்கரில் குறுவை சாகுபடிக்காக தயாா் செய்யப்பட்ட நாற்றுகள் காய்ந்தும், நடவுசெய்த பயிா்கள் கருகியும் வருகின்றன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், மின்மாற்றியை சீரமைப்பதில் காலதாமதம் ஆவதால் நாற்றுகள் காயத்தொடங்கின.
இந்நிலையில், காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா் குரு.கோபிகணேசன் தலைமையில் மாத்தூா் படுகை கிராம விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா், காய்ந்த நாற்றுக்களுடன் வந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில், மாத்தூா் ஊராட்சிக்கு ஆக்கூா் மின்பிரிவில் இருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது. மின்மாற்றி பழுதால் 600 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் வீடுகளிலும் மின்சாதனப் பொருள்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி பழுதடைந்த மின்மாற்றியை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.