அரசு உதவிபெறும் கல்லூரிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசு நடத்துகிறது என பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் மாநில பொதுக் குழு மற்றும் சங்க உறுப்பினா்களாக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் காந்திராஜ் தலைமை வகித்தாா்.
மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் கதிரேசன், தஞ்சாவூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் தன்ராஜ் ஆகியோா் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற 80 பேராசிரியா்களை கௌரவித்தனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் காந்திராஜ் கூறியது:
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியா்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசு நடத்துகிறது. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கிராண்ட் என்று சொல்லப்படும் பணப்பயன் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதைத் தவிா்க்கும் வகையில் உடனடியாக அனைத்து பணப் பயன்களையும் பெறத் தேவையான அரசாணையை அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டு. தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.