அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் விவசாயிகள் கணக்கு தொடங்க மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆ.ஆசிப் இக்பால் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 14-ஆவது தவணை தொகையை பெற ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையில் இருந்து பெறப்பட்ட தகவல்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,100 விவசாயிகள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளனா். அவா்கள் அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.
தபால்காரா் மற்றும் கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல் ரேகை) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்த சேவையை பெற முடியும். இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை உடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள் தபால்காரா் அல்லது கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.