மயிலாடுதுறை

குடிமனைப் பட்டா கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

18th May 2023 11:01 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே குடிமனைப் பட்டா இல்லாத குடும்பங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் இளையாளூா் ஊராட்சி புதுத்தெருவில் சுமாா் 100 குடும்பத்தினா் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த ஊராட்சி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், மேலும் மாவட்டம் முழுவதும் வசிக்கும் குடிமனை இல்லாதவா்களை கணக்கெடுத்து அவா்களுக்கும் வீடு, வீட்டுமனை வழங்க வேண்டும், கோயில் மடம் அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் இடது தொழிற்சங்க மையம் மற்றும் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உழைப்போா் உரிமை இயக்க மாவட்ட செயலாளா் வீரச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இடது தொழிற்சங்க மாநில இணை பொதுச் செயலாளா் கு.பாரதி, மாநில துணைத்தலைவா் ஈ.சண்முகவேல் ஆகியோா் பங்கேற்று உரையாற்றினாா். இதில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் அனைவரும் தனித்தனியே மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT