மயிலாடுதுறை வட்டம், அருண்மொழிதேவன் ஊராட்சி உக்கடையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இப்பகுதியில் மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, குறுவை சாகுபடி பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
இதைக் கண்டித்து, பாமக ஒன்றியச் செயலாளா் மதிவாணன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் எஸ்.துரைராஜ், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மயிலாடுதுறை-மணல்மேடு வழித்தடத்தில் நீடூா் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம், மின்வாரிய அதிகாரி கலியபெருமாள், ஊராட்சி ஒன்றிய ஆணையா் மஞ்சுளா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனால் மயிலாடுதுறை-மணல்மேடு வழித்தடத்தில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.