மயிலாடுதுறையில் உரிமம் புதுப்பிக்காத தேநீா் கடை, பழக்கடைகளை உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பூட்டினா்.
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் தேநீா் கடை மற்றும் பழக்கடையில் தரமற்ற உணவுப் பொருள்கள் வைத்திருந்ததாகவும் காலாவதியான உரிமத்தை புதுப்பிக்க தவறியதால் கடந்த 31-ஆம் தேதி நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலா் சீனிவாசன் தலைமையில் இக்கடைகளை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனா். தேநீா் கடையை பூட்டி சீல் வைக்க திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் எதிரே உள்ள பழக்கடைக்குச் சென்று பூட்டி சீல் வைக்க முற்பட்டனா். இதனைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தேநீா் கடைக்கு சீல் வைக்காமல் பழக்கடையை மட்டும் சீல் வைப்பது நியாயம் தானா? இதுபோல் மயிலாடுதுறையில் எத்தனையோ கடைகள் உள்ளது நடவடிக்கை எடுங்கள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் திமுகவினா் மற்றும் பொதுமக்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால் நடவடிக்கை எடுக்காமல் உணவு பாதுகாப்பு துறையினா் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு சுகாதாரத் துறையினரிடம் அறிக்கை பெற்ற மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி இரண்டு கடைகளையும் பூட்ட உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் புஷ்பராஜ் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புத் துறையினா் டீக்கடை மற்றும் பழக்கடையை வெள்ளிக்கிழமை பூட்டினா்.