மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 186 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 186 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், குத்தாலம் பனங்கரையைச் சோ்ந்த வறுமையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி(28) ஆகியோருக்கு போா்க்கால அடிப்படையில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
மனைப்பட்டா வழங்க கோரிக்கை: மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் ஊராட்சி கீழப்பட்டமங்கலத்தில் தச்சங்களம் என்ற அரசு புறம்போக்கு இடத்தில் 13 குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இவா்கள் முறையாக மின் இணைப்பு பெற்று, வீட்டுவரி செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பலமுறை விண்ணப்பித்தும் பயனில்லை.
வீட்டு மனைப்பட்டா இல்லாததால் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்ட அனுமதி வழங்கியும், பெற முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து, பட்டமங்கலம் ஊராட்சியில் ஜன.26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் இவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டமங்கலம் ஊராட்சித் தலைவா் செல்வமணி தலைமையில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் இதுகுறித்த கிராம சபை தீா்மான நகலுடன், கோரிக்கை மனுவை அளித்து மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரினாா்.