மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் மற்றும் திறன் குறைந்த பழைய மின் மோட்டாா் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா் பம்புகள் மானியத்தில் அமைத்துக் கொடுப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 5 ஏக்கா் வரை நிலம் வைத்திருக்கும் சிறு / குறு விவசாயிகளுக்கு பாசனநீரை இறைத்திட புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டாா் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின் மோட்டாா் பம்பு செட்டுக்கு ரூ. 10,000 மானியம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, துரைக்கண்ணு நகா், சித்தா்காடு, மயிலாடுதுறை அலுவலகத்தை சிட்டா, சிறு/ குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நில வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.