சீர்காழி அருகே நிறுத்தப்பட்ட கிராமப் பேருந்து மீண்டும் இயக்கக் கோரி சீர்காழி கிளை அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமாத்தூர், ஓலையம்புத்தூர், மேலமத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சீர்காழியில் இருந்து மேலமாத்தூர் வரை தடம் எண் 17 அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்த பேருந்து தினசரி காலை, மாலை என இருவேளை சென்று வந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர். கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இப்பேருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், அரசு போக்குவரத்துக் கழகம் சீர்காழி கிளையிலும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று மாணவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சீர்காழி கிளை மேலாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஏழு நாள்களுக்குள் பேருந்து இயக்கப்படும் என அறிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.