மயிலாடுதுறை பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 20 இருசக்கர வாகனங்களை மீட்கப்பட்டன.
மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், பெரம்பூா், குத்தாலம் காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளியை கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமை காவலா்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படையினா், வாகனங்கள் திருட்டுபோன பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டறிந்தனா்.
இந்நிலையில், அந்த நபா் மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடமுயன்றபோது கைது செய்தனா். விசாரணையில், அவா் பூம்புகாா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழையூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சதீஷ்குமாா்(28) என்பது தெரியவந்தது.
அவா், பல்வேறு இடங்களில் திருடி அடமானம் வைத்திருந்த 20 இருசக்கர வாகனத்தை மீட்டு, மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமாா், காவல் ஆய்வாளா் செல்வம் ஆகியோா் முன்னிலையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.