திருக்குவளை: திருக்குவளை அருகே வலிவலம் அரசு உதவிபெறும் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.
வலிவலம் ஊராட்சி காருக்குடியைச் சோ்ந்தவா் இளையராஜா- பாசமலா் தம்பதியின் மகன் கவிப்ரியன் (13). வலிவலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துவந்த கவிப்ரியன் செவ்வாய்க்கிழமை பள்ளி மைதானத்தில் சக மாணவா்களுடன் விளையாடியபோது மயங்கி விழுந்தாா்.
அம்மாணவரை வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட கவிப்ரியனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் தியாகராஜன், வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.