சீா்காழி அருகே அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி வேளாண் பயிற்சி பெறும் திட்ட தொடக்க விழா சோதியக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புல பட்டப்படிப்பு இறுதிஆண்டு பயின்றுவரும், மாணவிகள் வேளாண்மை தொழில் குறித்து நேரடி அனுபவம் பெறுவதற்காக கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, புத்தூா் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் இந்த திட்ட தொடக்க விழா ஊராட்சித் தலைவா் கே. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்கள் டி. ஜெயசீலன், மணிவண்ணன் சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து, மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள், நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினா். விழாவில் ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேளாண் புல இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் 75 நாட்கள் சோதியக்குடி கிராமத்தில் தங்கி வேளாண்மை பணிகள் குறித்து நேரடி அனுபவத்தை பெற உள்ளனா்.