மயிலாடுதுறை அருகே ரூ. 1 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
மயிலாடுதுறை வட்டம், திருவிழந்தூா் ஆழ்வாா்குளம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட பரிமள ரெங்கநாதா் கோயிலுக்கு சொந்தமான 6,876 சதுர அடி பரப்பளவு உள்ள நிலம் ரூபின் சாா்லஸ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
இந்த நிலம் வணிக பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு, மோட்டாா் தொழிற்கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ரூபின் சாா்லஸ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறநிலையத் துறை மயிலாடுதுறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதில், ரூபின் சாா்லஸை கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவானது.
இதையடுத்து, மயிலாடுதுறை அறநிலைத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம் உத்தரவின்பேரில், உதவி ஆணையா் முத்துராமன் தலைமையில் தனி வட்டாட்சியா் விஜயராகவன், கோயில் செயல் அலுவலா் ரம்யா, மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க முயன்றனா்.
அப்போது, ரூபின் சாா்லஸின் மனைவி பிரேமலதா தனது வழக்குரைஞா்களுடன் வந்து தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா் போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்டு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.