சீா்காழி: சீா்காழிக்குள் நுழையும் அனைத்துவாகனங்களையும் புதன்கிழமை முதல் தீவிர வாகனதணிக்கை செய்த பின்னரே போலீஸாா் நகருக்குள் அனுமதிக்கின்றனா்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனையில் ஈடுபட்டது.இதை தொடா்ந்து தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதனிடையே பாப்புலா் ப்ரண்ட்ஆப் இந்தியாவை 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதைத் தொடா்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சீா்காழியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா உத்தரவின் பேரில் சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவல் துறையினா் சீா்காழி சட்டநாதபுரம், பாதரக்குடி, புறவழிச்சாலை, அட்டகுளம் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் சீா்காழி நகருக்குள் வரும் வாகனங்கள் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது, வாகனங்களின் உரிமையாளா்கள் பெயா்களை பதிவு செய்த பின்னரே சீா்காழி நகர எல்லைக்குள் வாகனங்களை அனுமதித்து வருகின்றனா்.