மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நூற்றுக்கணக்கானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் போற்றப்படுகிறது. இங்கு, 12 புண்ணிய தீா்த்தங்களும், காசியைப்போன்று விஸ்வநாதா், கேதாரநாத் கோயில்களும், காலபைரவா் கோயிலும் காவிரியின் இருகரைகளிலும் அமைந்துள்ளன.
இங்கு புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிப்பது சிறப்பு வாய்ந்தது. மகாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி துலாக் கட்டத்தில் ரிஷப தீா்த்தத்தில் ஏராளமானோா் புனித நீராடியும், தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்தும் வழிபாடு நடத்தினா்.