மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சி காட்டூா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை (எங்கும் அறிவியல்-யாவும் கணிதம்) தொடங்கி வைத்தாா். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அவ்வகையில், திருவாளப்புத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் வை.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. வரதம்பட்டு ஊராட்சி தலைவா் கோவிந்தன், பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் பஷீா் அகமது, ஊராட்சி உறுப்பினா் ஐனுல்மரீலியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், பலூன் பறக்கவிட்டு அரசு வழிகாட்டுதலின்படி வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. தொடா்ந்து, மாணவா்கள் அறிவியல் சோதனைகளை செய்து காட்டினா். மன்ற பொறுப்பு ஆசிரியா்கள் விஜயா, வள்ளிக்கண்ணு ஆகியோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா். முன்னதாக பள்ளி தலைமையாசிரியா் (பொ) கு.முருகன் வரவேற்றாா். நிறைவாக, உதவி ஆசிரியா் பி.டென்னிஸ் நன்றி கூறினாா்.
திருக்குவளை: நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழாவுக்கு, தலைமையாசிரியை பரமேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், மாணவா்கள் எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் புதிா் கணக்குகள் செய்து காண்பித்தனா். ஏற்பாடுகளை கணித பட்டதாரி ஆசிரியா் லோகநாதன், அறிவியல் பட்டதாரி ஆசிரியா் சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.