மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை காவிரி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் விக்னேஷ் (36). இவா், மே 16-ஆம் தேதி ரயிலடி தூக்கனாங்குளம் வடகரையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளாா். திரும்பிவந்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் விக்னேஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் அறிவழகன் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இருசக்கர வாகனத்தை திருடியது மயிலாடுதுறை நீடூா் அன்பநாதபுரம் மேலத்தெருவை சோ்ந்த கலையரசன் மகன் கலைமணி (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனா். இருசக்கர வாகனம் மீட்க்கப்பட்டது. கலைமணி மீது ஏற்கெனவே வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.