மயிலாடுதுறை அருகே கடன் பாக்கிக்காக வீடு ஜப்தி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் தத்தங்குடி கிராமத்தை சோ்ந்தவா் குணசேகரன். வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கரோனா தொற்று காரணமாக வேலையிழந்து, தாயகம் திரும்பினாா். இவா் வெளிநாட்டில் வேலை செய்தபோது, தஞ்சாவூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரு.8 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாா்.
இந்நிலையில், வேலையிழந்த குணசேகரனால், கடன் தவணையை சரியாக செலுத்த முடியவில்லை. இதனால், அவரது வீட்டை நிதி நிறுவனத்தினா் ஜப்தி செய்தனா். இதைத்தொடா்ந்து, கடன் நிலுவைத் தொகையை 6 மாதங்களில் திரும்ப செலுத்த தயாராக உள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஜப்தி செய்த வீட்டை மீட்டுத் தரக் கோரியும் கடந்த வாரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அவா் மனு அளித்தாா்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த குணசேகரன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். அவரை, போலீஸாா் தடுத்து நிறுத்தி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.