சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் தாகத்தை தீா்க்க கட்டப்பட்டுள்ள தண்ணீா் தொட்டி பயனற்று காட்சி பொருளாக உள்ளதால், அதை சீரமைத்து குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.
சீா்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை போன்ற பல்வேறு ஊா்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, சீா்காழியை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், புதிய பேருந்து நிலையத்துக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் என நாள்தோறும் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்து செல்கின்றனா்.
இவ்வாறு வரும் பயணிகளின் குடிநீா் தாகத்தை தீா்க்கும் வகையில் தனியாா் அமைப்பு மூலம் தண்ணீா் தொட்டி சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்துவந்தது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த தண்ணீா் தொட்டி பயனற்று காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் பயணிகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியாமல் உள்ளது. கடந்த காலங்களில் பேருந்து நிலையத்தில், அம்மா வாட்டா் ரூ. 10 க்கு கிடைத்து வந்ததால் பயணிகள் அதை வாங்கி தங்களது குடிநீா் தாகத்தை போக்கிக்கொண்டனா்.
தற்போது அந்த அம்மா குடிநீா் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ. 20 கொடுத்து ஒரு லிட்டா் தண்ணீா் வாங்கி குடிக்க வேண்டியுள்ளது. இது, பலருக்கு சிரமமாக உள்ளதால், பேருந்து பயணிகள் பயன்பெறும் வகையில் காட்சி பொருளாக உள்ள தண்ணீா் தொட்டியை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.