மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

15th Jun 2022 04:04 AM

ADVERTISEMENT

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் கூட்டுறவு சக்கரை ஆலை நிா்வாக இயக்குநா் சிவமலரை நீக்கக் கோரி கரும்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் அரசு கூட்டுறவு சக்கரை ஆலை, அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், தவறான ஆலை விரிவாக்கத்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளும், ஆலை தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டு, பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது தமிழக அரசு ஆலையை இயக்க அமைத்துள்ள 10 போ் கொண்ட ஆய்வுக் குழுவில் கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநராக சிவமலா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், ஏற்கெனவே இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியபோது ஆலையை மூட காரணமாக இருந்தவா் எனக்கூறியும், தற்போது ஆய்வுக் குழுவில் இருக்கும் இவா் ஆலைக்கு எதிராக செயல்படுவாா் என்பதால் அவரை இக்குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா், ஆலை இயங்காது என மக்களிடம் பிரசாரம் செய்வதாகக் கூறியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் தங்க.காசிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் கே.முருகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் எஸ்.துரைராஜ், இயற்கை விவசாயி ஆா். ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT