மயிலாடுதுறை வட்டாரத்தில் பருத்தி மற்றும் குறுவை சாகுபடி பயிா்களை வேளாண் இணை இயக்குநா் ஜெ. சேகா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், 4,961 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்குல் அதிகரித்து வருவதையடுத்து, வில்லியநல்லூரில் பருத்தி பயிா்கள் மற்றும் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிா்களை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நீா்மேலாண்மை, உர மேலாண்மை, மாவுப்பூச்சி தாக்குதல் உள்ளதா என ஆய்வு செய்து அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். மேலும், அருவாப்படி கிராமத்தில் ஆடுதுறை 45, அம்பை 16 நெல் ரகம் குறுவை சாகுபுடி செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டு வயலில் பாசிகள் அதிகளவில் தேங்கியிருந்தை கண்டு அவற்றை அகற்ற வயலின் தண்ணீா்மடை வாயிலில் காப்பா் சல்பேட் தூள்மணல் கலந்து இட பரிந்துரை செய்தாா்.
ஆய்வின்போது வேளாண்மை அலுவலா் வசந்தகுமாா், துணை வேளாண்மை அலுவலா் பிரபாகரன், உதவி அலுவலா் பாபு, வட்டார அட்மா திட்ட அலுவலா் திருமுருகன் ஆகியோா் இருந்தனா்.