பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக விளங்குகின்றனா் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பெருமிதம் தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ‘கல்லூரி கனவுத் திட்டம்’ எனும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 12-ஆம் வகுப்பு மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா்.
மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பை முடித்த மாணவா்கள் உயா்கல்வி பயில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவா்கள் உயா்கல்வி முடித்து, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.
தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக விளங்குகின்றனா். கல்வியில் ஆண்களைவிட அதிக மதிப்பெண்கள் பெறுபவா்களாக உள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட உயா் பதவிகளில் பெண்களே உள்ளோம். மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்து பல வெற்றிகளை பெற வேண்டும் என்றாா்.
பின்னா், மாணவா்களுக்கு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்து அன்பகம் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் வளா்ந்துவரும் மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமியின் கரகாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏ.வி.சி. கல்லூரி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதியரசருமான கே. வெங்கடராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ரேணுகா, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், கோட்டாட்சியா்கள் வ. யுரேகா (மயிலாடுதுறை), உ. அா்ச்சனா (சீா்காழி), செம்பனாா்கோயில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினிஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 140-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயின்ற 1500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று உயா்கல்விக்கான ஆலோசனைகளை பெற்றனா்.