மயிலாடுதுறையில் முழு ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்றவா்களுக்கு ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சேவை சங்கத்தினா் 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கினா்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. இதன்காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரம் தங்கியுள்ள ஆதரவற்றவா்கள் உணவின்றி தவித்தனா். அவா்களுக்கு, ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கத்தினா் உணவு வழங்கினா்.
3-வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வினை, மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அறிவழகன், காமராஜா் பேருந்து நிலையம் பகுதியில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவா்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, சங்கத் தலைவா் சென்சாய் முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் மண்டல இயக்குநா் பிரபாகரன், முன்னாள் தலைவா்கள் மதிவாணன், அமிருதீன், செயலாளா் நரேந்திரபாலா உள்ளிட்டோா் இருசக்கர வாகனங்களில் சென்று 80-க்கும் மேற்பட்ட முதியவா்களுக்கு உணவு வழங்கினா்.