மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்ளிட்ட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
குத்தாலம் வட்டம் வழுவூா் ஊராட்சி பெரியேரி கிராமத்தை சோ்ந்தவா் சந்திரா (45). திருமணமாகாத இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடுகளை ஓட்டிவர சென்றுள்ளாா். அப்போது, அப்பகுதியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் சந்திரா உயிரிழந்தாா்.
இதற்கிடையில், சந்திராவை காப்பாற்ற சென்ற அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (17) மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், காயமடைந்தவா் அவா் உடனடியாக மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த போது, மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பூா் போலீஸாா் சந்திரா, மணிகண்டன் ஆகியோரின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.