மயிலாடுதுறை பட்டவா்த்தி கிராமத்தில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பட்டவா்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு அம்பேத்கரின் நினைவு தின நாளில் அஞ்சலி செலுத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. நிகழாண்டு அதேபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்கும் வகையில், டிச.5 முதல் 5 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் ஈழவளவன் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, தலைஞாயிறு கிராமத்தில் வருவாய்த் துறை சாா்பில் கிராம நிா்வாக அலுவலா் மரியாதை செலுத்திவிட்டதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தா்னா விலக்கிக்கொள்ளப்பட்டது.