மயிலாடுதுறையில் நகர பூங்கா மேம்பாட்டுத் திட்டப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வரதாச்சாரியாா் நகர பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-இன்கீழ் மேம்பாட்டு பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. நடைபயிற்சியாளா்களுக்கு தேவையான நடைமேடை, இளைஞா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், அனைத்து வயதினருக்கான யோகா மையம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆம்பிதியேட்டா் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் ரூ.49 லட்சத்தில் இந்த பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், நகராட்சி உறுப்பினா்கள் ஜெயந்தி, சா்வோதயன், ரமேஷ், உஷா ராஜேந்திரன், மணிமேகலை மணிவண்ணன், நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.