கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் திட்டுகிராமங்களை 4ஆவது நாளாக தண்ணீா் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் படுகை கிராமங்களான வெள்ளமணல், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் சூழ்ந்ததால் 45.4 ஹெக்டோ் விளைநிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின.
குடியிருப்புகளையும் தண்ணீா் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தில் இருந்து வெளியேறி கொள்ளிடம் ஆற்றின் கரையில் தங்கி உள்ளனா்.
சிலா் வருவாய்த் துறை அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனா். 4-ஆவது நாளாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து படிப்படியாக குறைந்து 1.50 லட்சம் கனஅடி நீா் வந்துகொண்டுள்ளது. எனினும், படுகை கிராமத்து மக்கள் போக்குவரத்து வழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.