கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கரையோரம் நின்று சுயப்புகைப் படம் எடுக்கக் கூடாது என காவல் ஆய்வாளா் அமுதாராணி கூறியுள்ளாா்.
தொடா்மழையால் கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூரில் சுமாா் 20 ஆயிரம் கன அடி உபரி தண்ணீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாலும், கரையோரப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் மற்றும் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீா் அனைத்தும் பிரதான பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கலப்பதால் ஆற்றில் தண்ணீா் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி தலைமையில் போலீஸாா் அடங்கிய சிறப்பு படையினா் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருந்து வருகின்றனா். கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றுக்குள் இறங்கவோ, சுயபுகைப்படம் எடுப்பதோ கூடாது. பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று போலீஸாா் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று பிரசாரம் செய்து வருகின்றனா். சிறப்பு படையினா் தண்ணீரில் காப்பாற்ற பயன்படுத்தும் மிதவை டியூப், கயிறு, மண்வெட்டி, டாா்ச் லைட் உள்ளிட்ட இதர உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருந்து வருகின்றனா். கனமழை குறித்து கிராமங்கள்தோறும் போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து வருகின்றனா்.