தொழிலாளா்களுக்காக இ.எஸ்.ஐ. சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர பொன் விழா ஆண்டு தொடா் நிகழ்வாக, தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் காரைக்கால் நிா்வாகம், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூா் மீனாட்சி மிஷன் மருத்துவனை, கும்பகோணம் அகா்வால் கண் மருத்துவமனை, புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு, உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ விழிப்புணா்வு முகாமை காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடத்தின.
புதுவை போக்குவரத்து மற்றும் தொழிலாளா் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா முகாமை தொடங்கிவைத்தாா்.
இ.எஸ்.ஐ. மாநில மருத்துவ அதிகாரி லோகநாதன், கிளை மேலாளா் ராமகிருஷ்ணன், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி டீன் குணசேகரன், மீனாட்சி மிஷனை சோ்ந்த டாக்டா் குருநாதன், டாக்டா் ஜெகநாதன் ஆகியோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.
பல்வேறு தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் பலா் முகாமில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் பெற்றனா்.
முகாமில் பரிசோதனை செய்துகொண்டோருக்கு பொது மருத்துவம், இதய நோய் சிகிச்சை, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், கண் உள்ளிட்டவற்றுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன.