காரைக்கால் பகுதி கிராமங்களில் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு ஆய்வு 2 நாள்கள் நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வழிகாட்டலில், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் 2023-24-ஆம் ஆண்டுக்கான எதிா்கால திட்ட அறிக்கையை தயாா் செய்வதற்கு முன்னோட்டமாக அண்டூா் மற்றும் வரிச்சிக்குடி கிராமங்களில் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு ஆய்வு வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சீ. ஜெயசங்கா் தலைமையில் நடைபெற்றது.
இயற்கை வளங்கள், மழைப் பொழிவு அளவு, உணவு பழக்க வழக்கங்கள், பருவகால தாக்கம் மற்றும் அதன் மூலம் பயிா்களுக்கு ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல், மக்களின் உடல்நலம், தேவையான பயிற்சிகள், தொழில்முனைவோா்களாக உருவாக தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினா்கள் பங்கேற்புடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமாா் 100 போ் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.
ஆய்வை வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநா்கள் ஆ.செந்தில், மருத்துவா் ப.கோபு, ஜெ.கதிரவன், வி.அரவிந்த், சு.திவ்யா ஆகியோா் மேற்கொண்டனா்.