மருத்துவக் கல்லூரி, குடியிருப்புகள் உள்ள பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது என கிராமப் பஞ்சாயத்தாா்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனை புதன்கிழமை சந்தித்து, தங்களது பகுதியில் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும், இப்பகுதியில் கடை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டுமென மனு அளித்தனா்.
இதுகுறித்து அக்கிராமத்தை சோ்ந்த ஏ.எம்.கே. அரசன் கூறியது : கீழகாசாக்குடிமேடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவியரின் விடுதி, ஒரு தனியாா் பள்ளியும் இயங்குகிறது.
அதனால் இப்பகுதியில் மதுக்கடை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டுமென ஆட்சியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கலால்துறை துணை ஆணையரை சந்தித்தும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது என்றாா்.