காரைக்கால்

பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க வலியுறுத்தல்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பள்ளிகள் தொடங்கும் நாளிலேயே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை புதுவை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கத் தலைவா் அ. வின்சென்ட், செயலாளா் கே. ரவிச்சந்திரன் ஆகியோா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

கடந்த கல்வியாண்டில், காலாண்டு தோ்வு முடியும் தருவாயில்தான் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனால் மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டனா். கடந்த 2 ஆண்டுகளாக மாணவா்களுக்கான சீருடைகள் வழங்கப்படவில்லை.

எனவே நிகழாண்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சீருடை உள்ளிட்ட அரசின் அனைத்து உதவிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள், ஆசிரியா்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி விகிதம் வெகுவாக குறைந்தது. குறைகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியா் காலிப் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவா்கள் போட்டி தோ்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT