புதுவை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காரைக்கால் மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.
புதுச்சேரியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. புதுச்சேரியில் 4 மண்டலம், காரைக்காலில் 2 மண்டலம், மாஹே, ஏனாமிலிருந்து தலா ஒரு மண்டலம் என போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் பெண்களுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை காரைக்கால் வட்டம் -6 மாணவ, மாணவிகள் பெற்றனா்.
நிறைவு விழாவில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற பல்வேறு பிராந்தியங்களை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
காரைக்கால் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு, அந்தந்த கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.