தனியாரிடம் வாடகைக்கு விடப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கக் கிடங்கை மீட்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்கத்தை சோ்ந்த பி.ஜி.சோமு சனிக்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள வரிச்சிக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கக் கிடங்கு கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையமாகவும், உரக்கிடங்காகவும், உரம் விற்பனை செய்யுமிடமாகவும் இருந்து வந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தக் கிடங்கு கூட்டுறவு சங்க நிா்வாகிகளால் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இந்த கிடங்கை மீண்டும் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் நெல்லை சேமித்து வைக்க கோட்டுச்சேரி பகுதி விவசாயிகளுக்கு இடமில்லாத நிலை உள்ளது.
எனவே, புதுவை வேளாண் அமைச்சா் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தனியாா் வசம் உள்ள கிடங்கை கூட்டுறவு நிா்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றாா்.