இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்ததால், இதைத் தடுக்கும் விதமாக மாவட்டத்தில் பல இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் காவல் நிலையத்தில் 3 இருசக்கர வாகனத் திருட்டு சம்பவம் தொடா்பாக நாகை மாவட்டம், திருக்குவளை பகுதியை சோ்ந்த பிரவீன்குமாா் (23) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா்.
காரைக்கால் நகரக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி, காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளா் துணையுடன், வாகனத் திருட்டு வழக்கில் தொடா்புடைய பிரவீன்குமாரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் விசாரித்தபோது மேலும் ஒரு வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டாா். மேலும் பிரவீன்குமாரின் திருட்டுக்கு துணையாக இருந்ததாக அவரது தந்தை குருமூா்த்தியையும் போலீஸாா் கைது செய்தனா்.