காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியில் கணிதத்துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
3 நாள் நடைபெறும் இக்கருத்தரங்கு என்ஐடியின் வ.உ.சி. நிா்வாக வளாகத்தில் காணொலி வாயிலாக தொடங்கப்பட்டது. என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். பதிவாளா் சீ. சுந்தரவரதன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா் கே. பாலச்சந்திரன் இணைய வாயிலாக கலந்துகொண்டு, கணிதத்தில் பகுதியளவு வேறுபாடு சமன்பாடுகளுக்கான இருப்பு முடிவுகள் குறித்துப் பேசினாா்.
இக்கருத்தரங்கில் ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஸ்பெயின், துருக்கி, ஆா்ஜென்டினா உட்பட உலகின் பல நாடுகளைச் சோ்ந்த புகழ்பெற்ற பேராசிரியா்களால் பல்வேறு பயன்பாட்டு கணித தலைப்புகளில் விரிவுரைகள் வழங்கப்படவுள்ளதாக கருத்தரங்கின் தலைவரான என்ஐடிஉதவிப் பேராசிரியா் (கணிதம்) வி. கோவிந்தராஜ் தெரிவித்தாா்.
இக்கருத்தரங்கில் பிரபல பேராசிரியா்கள் முன்னிலையில் 105 ஆராய்ச்சியாளா்கள் 3 நாட்களில் 5 இணைஅமா்வுகளில் தங்களின் ஆராய்ச்சிப் பணிகள் குறித்து விளக்கவுள்ளனா். தொடக்க நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியரும், கணிதத் துறைத் தலைவருமான ஜி.எஸ். மஹாபத்ரா வரவேற்றாா்.
காணொலி வழியே நடைபெறும் இக்கருத்தரங்கில் இலவசமாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமா்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஸ்கோபஸில் குறியிடப்பட்ட இன்டா்நேஷனல் ஜா்னல் ஆஃப் டைனமிக்ஸ் அண்ட் கன்ட்ரோல் என்கிற அமைப்பில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.