காரைக்கால்: காரைக்காலில் முன் மழலையா் பள்ளிகளில் ஆசிரியா் இல்லாத நிலையில் கல்வித்துறை உருவாக்கி வருவதாக ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
புதுவை யூனியன் பிரதேச ஆசிரியா் சங்கத் தலைவா் ஸ்ரீராம் தலைமையில் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை இரவு கூறியது:
தொடக்கக் கல்விக்கு ஆணி வேராக இருப்பது முன் மழலையா் பள்ளி. முன் மழலையா் தொடக்கக் கல்வி தொடங்கி 15 ஆண்டுகள் கடந்த பின்பு, நிகழ் கல்வியாண்டில் முன் மழையா் தொடக்கப்பள்ளி ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டது வரவேற்கத்தக்கது.
காரைக்கால் பள்ளிகளில் பணியாற்றி வந்த 12 முன் மழலையா் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மாற்று ஆசிரியா் நியமிக்காமல் புதுச்சேரிக்கு பணியிட மாறுதலை கல்வித்துறை வழங்கியது.
இதற்கு சங்கம் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அது தடுக்கப்பட்டது. தற்போது அதில் 2 முன் மழலையா் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு மாற்று ஆசிரியா் நியமிக்காமல் புதுச்சேரிக்கு மாற்றல் ஆணை கல்வி அலுவலகத்துக்கு வந்தது.
இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அலுவலக நேரம் முடியும் நேரத்தில் அவசர அவசரமாக அவா்களுக்கு விடுவிப்பு ஆணை வழங்கி, அனுப்பியுள்ள செயல் கண்டனத்துக்குரியது.
காரைக்கால் அரசு பள்ளி மாணவா்களின் நலனுக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரைக்கால் கல்வித் துறை அதிகாரி மற்றும் வட்டத் துணை ஆய்வாளா்கள், புதுவை அரசியல்வாதிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கைப்பாவையாகவே செயல்படுகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் முன் மழலையா் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பற்றாக்குறை இருக்கும் வேலையில், எந்தவித மாற்று ஆசிரியரும் நியமிக்காமல் பணியிட மாறுதல் செய்வதால், தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள், முன் மழலையா் வகுப்பு எடுக்கவேண்டிய நிலை உள்ளது. காரைக்காலில் முன் மழலையா் பள்ளி ஆசிரியா்கள் இல்லாத நிலை உருவாகிவருகிறது.
காரைக்காலில் ஊதியம், புதுச்சேரியில் பணி என இருப்போரை உடனடியாக காரைக்காலுக்கு மாற்றவேண்டும். இதை செய்யத் தவறினால், ஆசிரியா் சங்கம் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் என்றனா்.