வீரபாண்டி சித்திரைத் திருவிழாவுக்கு மேளவாத்தியம் வாசிக்கச் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை, ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூலத்தூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சக்திவேல் (23). மேளவாத்திய தொழிலாளியான இவா், வீரபாண்டியில் தங்கியிருந்து சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நோ்த்திக் கடன் செலுத்துபவா்களுக்கு மேளவாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில், பழனிசெட்டிபட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த சக்திவேல், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.