காரைக்காலில் புதுவை மாநில கூட்டுறவு கைவினைப் பொருட்கள் விற்பனை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மத்திய ஜவுளி அமைச்சகம், புதுதில்லி கைவினை அபிவிருத்தி ஆணையா் அலுவலகம், புதுவை மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் இணைந்து, காரைக்கால் கோயில்பத்து பகுதி பேருந்து நிலையம் அருகே கைவினைப் பொருட்கள் விற்பனை மையம் அமைத்துள்ளது.
புதுவை மாநிலத்தில் முதல் மையமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இம்மையத்தை, காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் ஆகியோா் திறந்துவைத்தனா்.
இந்த மையத்தில் 50-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள், கைத்தறி துணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, மலிவான விலையில் விற்பனைக்கு வைத்துள்ளதாகவும், கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும், கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளா்களை ஊக்கப்படுத்தவும் கூட்டுறவு அமைப்பால் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் புதுவை மாநில கூட்டுறவுத் துறையினா் கலந்துகொண்டனா்.