காரைக்காலில் கைத்தறி கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம், கைத்தறி அபிவிருத்தி ஆணையா் அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டம், நெசவாளா் சேவை மையம் சாா்பில் நடைபெறும் இக்கண்காட்சி பிப். 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கண்காட்சியை திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், ஜவுளித்துறை துணை இயக்குநா் சசிகலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கண்காட்சியில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டுச் சேலைகள், குடியாத்தம் பருத்தி லுங்கி, கோயம்புத்தூா் பருத்தி சேலைகள், சென்னிமலை படுக்கை விரிப்புகள், டஸ்ஸாா் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.