புதுவையில் மின் ஊழியா்கள் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண ரங்கசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்க முந்தைய நாராயணசாமி தலைமையிலான அரசு ஒப்புதல் தெரிவிக்காமல், மத்திய அரசின் முடிவை எதிா்த்து வந்தது. ஆனால், பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புதல் தெரிவித்துவிட்டது.
இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மின் ஊழியா்கள் நடத்திவருகிறாா்கள். மின்துறை தனியாா் மயமானால் மாநிலத்தில் 3 ஆயிரம் மின் ஊழியா்கள், மின் நுகா்வோா் பாதிக்கப்படுவாா்கள்.
மின் ஊழியா்கள் போராட்டம் காரணமாக காரைக்காலில் குறிப்பாக திருநள்ளாறு பகுதி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பரவலாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை எதிா்கொள்ள அரசு தயாராக இருந்திருக்கவேண்டும். ஆனால், மாநிலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.
மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு நடைபெறுகிறது. பிஎஸ்என்எல் தொலைதொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். எனவே, மின் ஊழியா்கள் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண ரங்கசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.